மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இயல்பு வாழ்க்கை நேற்று முன்தினம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. 47 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது சென்னைவாசிகளை மிகுந்த அச்சத்திற்கு ஆளாக்கியது.
மிரட்டிய மிக்ஜாம்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நேற்று முன்தினம் ஒட்டுமொத்த சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கினாலும் நேற்று பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. இதனால், அந்த பகுதிகளில் மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஆனால், சென்னையில் வழக்கமாக மழை பெய்தாலே மிகுந்த சேதங்களை சந்திக்கும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், வட சென்னையில் மூலக்கொத்தளம், மிண்ட், கொடுங்கையூர், ராயபுரம் ஆகிய பகுதிகளிலும் கோடம்பாக்கம், தி.நகர், ஆதம்பாக்கம் என பல பகுதிகளிலும், சென்னையின் பிரதான சுரங்கப்பாதைகள் பலவற்றிலும் தற்போது வரை தண்ணீர் வடியாமல் இருக்கிறது.
வடியாத வெள்ளம்
மழை நின்று இன்று இரண்டாவது நாளாகியும் இன்னமும் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது. இந்த பகுதிகளில் மாநகராட்சியும், அரசும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர். மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் எப்போது மழை வந்தாலும் மிக கடுமையாக இந்த பகுதிகள் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏரிகள் ஆக்கிரமிப்பே இதற்கு பிரதான காரணம் என்பது நமக்கு தெரியும். ஏரிகள் ஆக்கிரமிப்பிற்கு அப்போதே அனுமதித்துவிட்டு, அந்த பகுதிளை ஐ.டி. தொழில்நுட்ப பூங்கா பகுதியாக மாற்றியது அரசின் தவறு என்பதை மறுக்க முடியாது.
2015 கற்றுக்கொடுத்த பாடம்
ஆனால், ஆங்கிலேயர் காலம் முதல் உருவாக்கப்பட்ட வட சென்னையில் மழைநீர் மார்பளவு தேங்குவதற்கு ஏரிகள் ஆக்கிரமிப்பு என்று காரணம் சொல்ல முடியாது. அதற்கும் பலர் வட சென்னை அப்போதே உருவாக்கப்பட்ட நகரம், முறையான வடிகால் வசதி இல்லை என்று கூறுகின்றனர். அது உண்மை. ஆனால், எப்போது பெருமழை, வெள்ளம் சென்னையில் வந்தாலும் வழக்கமாக பாதிக்கப்படும் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.
ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட இடங்களில் வசிப்பவர்களை அப்புறப்படுத்துவது என்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்று, அதேபோல வடிகால் வசதி முறையாக வடசென்னையில் இல்லை என்று பேசிக்கொண்டிருப்பதும் அர்த்தமற்ற ஒன்று. இப்போதைக்கு தேவை தீர்வு. 2015 பெருவெள்ளமும், மழையும் நமக்கு பாடம் கற்றுக்கொடுத்த பிறகும் அரசுகளும், அதிகாரிகளும் இனி வரும் காலங்களில் சிக்காமல் தப்புவது? என்று முன்னெச்சரிக்கையாக செயல்படவில்லை என்பதையே இப்போது நிகழ்ந்துள்ள சம்பவங்கள் காட்டுகின்றன.
நிரந்தர தீர்வு எப்போது?
இனி வரும் காலங்களில் இந்த மழையும், வெள்ளமும் என்பது வராமல் தடுக்க முடியாது. இயற்கையை தடுக்க நம்மால் இயலாது. ஆனால், எதிர்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வடிகால் வசதிகள், தண்ணீர் விரைந்து வடிவதற்கான நடவடிக்கைகள், இதுவரை இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுத்தல், தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஆழப்படுத்துதல் என தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையையும் நாம் காப்பாற்ற இயலும்.
குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தண்ணீரை வடியவைத்துவிட்டு சென்னையை மீட்டுவிட்டோம் என்பது ஒரு தரப்பினரை வஞ்சிக்கும் செயல் ஆகும். எஞ்சி மழை வெள்ளத்தில் இன்னமும் மீளாத மக்களை விரைவாக மீட்க அரசு நடவடிக்கை எடுப்பதுடன், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு இனிமேல் சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு திட்டங்களை வகுப்பதே சிறப்பாகும்.














