தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்காஸ்ட் நிகழ்ச்சி வாயிலாக மக்கள் மத்தியில் பேசி வருகிறார். இந்த நிலையில், இன்றைய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “வணக்கம்! இந்தியாவுக்காகப் பேசுவோம் பாட்காஸ்ட்டின் முதல் அத்தியாயத்துக்குப் பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா தொடக்கம் ஆகியவற்றை முடித்துவிட்டு, இப்போது உங்களிடம் பேசுகிறேன்.
என்னாச்சு?
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கிய உடன், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தாய்மார் கேட்கிற மாதிரியான பதிவு அது, “எங்க முதல்வர் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்தாச்சு, பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?” இது தமிழ்நாட்டில் வைரல் ஆகிவிட்டது.
நம்முடைய நாடும் – நாட்டு மக்களும் மீண்டும் பா.ஜ.க.விடம் ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் இந்த பாட்காஸ்ட் சீரிஸ்-ஐ தொடங்கியிருக்கிறேன்.
2014-ஆம் ஆண்டு ஏமாந்தது போல், 2019-ஆம் ஆண்டு ஏமாந்தது போல்,
2024-ஆம் ஆண்டும் நாடு ஏமாந்துவிடக் கூடாது. 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு – குஜராத் மாநிலத்தை முன்னேற்றி – அங்கே தேனாறும் – பாலாறும் ஓடுவதுபோல பொய்ச் செய்திகளைப் பரப்பி – அதன் மூலமாக, தன்னை வளர்ச்சியின் நாயகனாக காட்டிக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
60 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதம் கொடுங்கள். நான் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன்” – என்று சொன்னார் மோடி. அவருக்கு 60 மாதம் மட்டுமில்லை – கூடுதலாக, இன்னொரு 60 மாதம் ஆட்சி செய்கிற அளவிற்கு வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா? என்பதுதான் அவர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. எந்த வகையில் எல்லாம் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட அவரால் முடியுமா?
5T:
5 T-தான் எனக்கு முக்கியம் என்று முதல் முறை பிரதமர்-ஆனபோது நரேந்திர மோடி சொன்னார்.
1. Talent – திறமை,
2. Trading – வர்த்தகம்,
3. Tradition – பாரம்பரியம்,
4. Tourism – சுற்றுலா,
5. Technology – தொழில்நுட்பம்
– இந்த 5 T-யில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
5C:
என்னைப் பொறுத்தவரையில், 5 C-க்கள் கொண்டதாகத்தான் இன்றைய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.
1. Communalism– வகுப்புவாதம்,
2. Corruption – ஊழல் முறைகேடுகள்,
3. Corporate Capitalism – மூலதனக் குவியல்,
4. Cheating – மோசடி,
5. Character Assassination – அவதூறுகள்
இந்த 5 C-க்கள் கொண்ட ஆட்சி இது.
இப்படித்தான் சொல்ல முடியும். இதை இதுவரை விளம்பர வெளிச்சங்கள் மூலமாக பா.ஜ.க. மறைத்து வந்தது. ஆனால் இப்போது உருவான இந்தியா கூட்டணியும், இந்தியா கூட்டணித் தலைவர்களின் பரப்புரையும் பா.ஜ.க. கட்சியின் முகத்திரையை – பிரதமர் நரேந்திர மோடி என்ற பிம்பத்தை கிழித்துவிட்டது. இதை நாங்கள் அரசியலுக்காக சொல்லவில்லை. உண்மையான தரவுகளின் அடிப்படையில்தான் சொல்கிறோம் என்று சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது.”
இவ்வாறு அவர் கூறினார்.














