தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். முருகன் சூரபத்மனை வதம் செய்ததை சூரசம்ஹாரமாக இந்த கந்த சஷ்டியில் மிகப்பெரும் விழாவாக தமிழ்நாட்டில் கொண்டாடுகிறோம். சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் கடற்கரையில் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் ஆண்டுதோறும் குவிவது வழக்கம்.
இந்த நிலையில், சென்னைவாசிகளும் கந்தசஷ்டி தினத்தன்று முருகன் கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவது வழக்கம். சென்னைவாசிகள் சென்னையில் கீழே உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வதால் ஏராளமான நன்மைகள் ஏற்படும்.
1. வடபழனி முருகன் கோவில்:
சென்னையில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களில் ஒன்றாகவும் இந்த வடபழனி முருகன் கோயில் திகழ்கிறது. 1890ம் ஆண்டு அண்ணாசாமி நாயக்கர் என்பவரால் மிகச்சிறிய அளவில் இருந்த முருகன் ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு வந்து வேண்டும் பக்தர்களுக்கு முருகன் திருவருளால் ஏராளமான நன்மைகள் கிட்டியது. பின்னர், பல முருக பக்தர்களால் இந்த கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. தற்போது சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக வடபழனி முருகன் கோவில் உள்ளது.
2. அறுபடை வீடு முருகன் கோவில் பெசன்ட் நகர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை ஒரு சேர வணங்கும் விதமாக கட்டப்பட்டதுதான் இந்த அறுபடை வீடு முருகன் கோவில் ஆகும். சென்னை, பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா காலனியில் இந்த- முருகன் சன்னதி உள்ளது. இங்கு சென்று வணங்கும்போது அறுபடை முருகன்களையும் வணங்கியது போல உணர்வு உண்டாகும்.
3. சிறுவாபுரி பால முருகன் கோவில்:
சென்னைக்கு மிக அருகில் உள்ளது இந்த சிறுவாபுரி முருகன் கோயில். சென்னையில் இருந்து செங்குன்றம் காரனோடை வழியாக மீஞ்சூர் பொன்னேரி வழியாக சென்றால் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்லலாம். சின்னம்பேடு, தென் சிறுவாபுரி, குசலபுரி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கோயில் மிகவும் பழமையானது. இந்த கோயிலுக்கு சென்று முருகனை வணங்கினால் தீராத நோய் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை ஆகும்.
4. திருப்போரூர் கந்தசுவாமி கோயில்:
திருமணத்தடை நீங்குதல், கடன் தொல்லை நீங்குதல், குழந்தை வரம் தருதல் என பல அருள்களை அள்ளித் தரும் கோயில் இந்த திருப்போரூர் கந்தசுவாமி கோயில். மிகவும் பிரபலமான இந்த கோயிலுக்கு சென்று வணங்கினால் ஏராளமான நன்மைகள் வாழ்வில் நடக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
5. குன்றத்தூர் முருகன் கோயில்:
சென்னையில் உள்ள பிரபலமான முருகன் கோயில்களில் ஒன்று குன்றத்தூர் முருகன் கோயில். மலைமேல் குடிகொண்டுள்ள இந்த முருகன் கோயில் மிகவும் பழமையான கோயில் ஆகும். திருப்போரூரில் வதத்தை நிறைவு செய்த முருகப்பெருமான் திருத்தணி செல்லும் வழியில், இந்த குன்றின் மீது அமர்ந்து இளைப்பாறியதாக புராணங்களில் கூறப்படுகிறது. சக்திவாய்ந்த இந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்குவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படும்.
6. சைதாப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில்:
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். இந்த கோயிலில் முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
7. குமரன் குன்றம் அஸ்தினாபுரம்:
சென்னை, குரோம்பேட்டை அருகே அமைந்துள்ளது அஸ்தினாபுரம். இந்த அஸ்தினாபுரத்தில் மலை மீது அமைந்துள்ளது குமரன்குன்றம் கோயில் ஆகும். மலை மீது குடியிருக்கும் இந்த முருகனை வணங்கினால் மனநிம்மதியும், வாழ்வில் திருப்பமும் ஏற்படும். இந்த மலை மீது நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனை காண அனைத்து நாட்களும் பக்தர்கள் கூட்டம் இருக்கும்.
மேலே கூறிய கோயில்களுக்கு சென்னைவாசிகள் தங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது சென்று வந்தால் நிச்சயம் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது ஐதீகம் ஆகும். இதுமட்டுமின்றி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி கோயிலும் சென்னைக்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














