உலகக்கோப்பை தொடருக்கு தயார் ஆவதற்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில், இந்திய அணி ஆடும் முதல் 2 போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் திலக் வர்மா, கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குரல் மேலோங்கியுள்ளது.
மறக்கப்பட்ட கருண்நாயர்:
சாம்சனுக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் ஒவ்வொரு தொடரிலும் அவர் இடம்பெறாத போது ஒலிக்கும். அதன்பின்பு, அவருக்கு அடுத்த ஏதாவது தொடரில் வாய்ப்புகள் வழங்கப்படும். சாம்சனுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை, வழங்கப்படவில்லை என்றே அவருக்கு திறமையை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், சாம்சனுக்கு வழங்கிய அளவு வாய்ப்புகள் கூட கிடைக்காமல் காணாமல் போன கிரிக்கெட் வீரர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
அவர்களில் மிக முக்கியமானவராக நாம் குரல் கொடுக்கத் தவறியவராகவும் இருப்பவர் கருண்நாயர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலே முச்சதம் அடித்த பிறகு பி.சி.சிஐ. நிர்வாகத்தால் கண்டு கொள்ளப்படாத வீரர் ஆவார். மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளிலே அவரது கிரிக்கெட் முடிந்து விட்டது என்றே சொல்லலாம். சென்னை மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 303 ரன்களை முதல் இன்னிங்சிலே விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
6 டெஸ்ட் மட்டுமே:
அதுவும் பேட்டிங் ஆர்டரில் 4வது விக்கெட்டிற்கு களமிறங்கி இந்த சாதனையை படைத்தார். அதன்பின்பு, அவருக்கு வெறும் 3 டெஸ்ட் போட்டிகள் ஆட மட்டுமே இந்திய அணி வாய்ப்பு வழங்கியது. ஒரு திறமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை, அதுவும் தான் ஆடிய 3வது டெஸ்ட் போட்டியிலே முச்சதம் அடித்த பேட்ஸ்மேனின் திறமைக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் இந்திய அணி நிர்வாகம் அவரை கழட்டிவிட்டது.
கர்நாடக மாநில அணிக்காக பல போட்டிகளில் ஆடிய கருண் நாயருக்கு ஐ.பி.எல். தொடரிலும் கொல்கத்தா, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளில் வாய்ப்பு கிடைத்தாலும் ஆடும் லெவனில் யாரும் வாய்ப்புகளை பெரியளவில் வழங்கவில்லை.
வெறும் 6 டெஸ்ட் போட்டியிலும், 2 ஒருநாள் போட்டியிலும் அவரது இந்திய அணி கேரியர் முடிந்துவிட்டது. 32 வயதான அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு என்பது கேள்விக்குறியே. 76 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 10 அரைசதங்களுடன் 1496 ரன்களை எடுத்துள்ளார். ஒருவேளை சாம்சனுக்காக ஒலித்த குரல் கருண்நாயருக்காக ஒலித்திருந்தால் அவர் நட்சத்திரமாக ஜொலித்திருக்க வாய்ப்பு உண்டு.














