உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் இறுதிப்பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் அஸ்வின் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட அணியில் அஸ்வின் இடம்பிடித்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பையில் அஸ்வின்:
ஆசிய கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, அவர் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால், அக்ஷர் படேல் அணியில் இடம்பிடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அனுபவம் மிக்க அஸ்வின் இடம்பெற்றுள்ளார். உலகக்கோப்பை ஆடிய அனுபவம் கொண்ட அஸ்வின், மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும் ஆவார்.
இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்த பெருமை அஸ்வினுக்கு உண்டு. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் அமர வைக்கப்பட்டதே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தோனி கேப்டனாக இருந்தபோது பல போட்டிகளில் அஸ்வினை வைத்து அவர் ஆட்டத்தையே தொடங்கியுள்ளார். அந்தளவு தனது சுழல் மூலம் அஸ்வின் எதிரணிக்கு நெருக்கடி அளிப்பதில் வல்லவர்.
ஆடும் லெவனில்?
கடந்த சில ஆண்டுகளாக அணிக்குள் வருவதும், பின் கழட்டிவிடப்படுவதும் என அஸ்வினின் பயணம் இருந்து வருகிறது. இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள அஸ்வின் இந்திய மண்ணில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம், ஆனால், அவர் ஆடும் லெவனில் களமிறக்கப்படுவாரா? இல்லை பெஞ்சில் உட்கார வைக்கப்படுவாரா? என்று போட்டியின்போதே தெரிய வரும்.
ஏனென்றால், சுழற்பந்துவீச்சாளர் – பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் ஜடேஜா கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார். இரண்டாவது ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இறங்குவாரா? அல்லது அஸ்வின் இறங்குவாரா? என்று தெரியவில்லை. குல்தீப்யாதவுடன் ஒப்பிடும்போது அஸ்வின் மிகுந்த அனுபவம் கொண்டவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.














