தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். துணிவு படத்திற்கு பிறகு பல கட்ட சிக்கல்களுக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தமானார். விடாமுயற்சி என்ற பெயர் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், வேறு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
விடாமுயற்சி:
விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி ரசிகர்களை மேலும் கலங்க வைத்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் பைக் சுற்றுப்பயணத்திற்காக ஓமன் சென்றிருந்த நிலையில் தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். அவர் சென்னை திரும்பியுள்ளதால் விரைவில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
விரைவில் ஷூட்டிங்:
சஸ்பென்ஸ் திரில்லர் வகை திரைப்படமாக விடாமுயற்சி படம் அமையும் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படத்தின் போஸ்டரும் அதையே உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் சஞ்சய்தத்தும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித் சென்னை திரும்பியுள்ளதால் இன்னும் சில வாரங்களில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.














