சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான தொடர் எதிர்நீச்சல் தொடர் ஆகும். இந்த தொடரில் வரும் ஆதி குணசேகரன், கரிகாலன், நந்தினி, ரேணுகா கதாபாத்திரங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
ஈடு செய்ய முடியாத இழப்பு:
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் மறைவு தமிழ்நாடு முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சீரியலில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் பெரியார் சித்தாந்தத்துடன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால், அவரது மரணம் பெரும் சோகத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது.
அவரது மறைவிற்கு பிறகு எதிர்நீச்சல் தொடரில் அடுத்த ஆதி குணசேகரன் யார்? என்ற மிகப்பெரிய கேள்வியே எழுந்தது. ஆனால், ஈடு செய்ய முடியாத அளவிற்கு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த மாரிமுத்துவின் இடத்தை வேறு ஒருவரை நிரப்ப சீரியல் குழுவினரும், மாரிமுத்துவின் இடத்தில் மற்றொருவரை பார்க்க ரசிகர்களும் தயாராக இல்லை.
திக்குமுக்காடும் எதிர்நீச்சல்
இந்த சூழலில், மாரிமுத்து வீட்டை விட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு காணாமல் போவது போல தொடரை சாமர்த்தியமாக இயக்குனர் திருச்செல்வம் நகர்த்தினார். மாரிமுத்துவின் இடத்தை சரி செய்ய ஜான்சி ராணியையும் வீட்டிற்குள் களமிறக்கினார். வீட்டை விட்டு சென்ற அண்ணன் குணசேகரனை தேடி கதிரும், ஞானமும் செல்வது போல காட்டினார். ஆனாலும், அவர் இல்லை என்று தெரிந்த காரணத்தால் ரசிகர்களால் தற்போது சீரியலுடன் ஒன்ற முடியவில்லை.
முன்பெல்லாம் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி கதாபாத்திரங்களை பரிதாபத்துடன் பார்த்த ரசிகர்கள் தற்போது உங்களால்தான் குணசேகரன் இல்லை என்ற எண்ணத்துடனே சீரியலை பார்க்கின்றனர். ஒவ்வொரு முறையும் கரிகாலன் வருந்தி அழும் காட்சியில் ரசிகர்களும் கண்கலங்கி போகிறார்கள்.
ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் அந்த வீட்டு பெண்கள் மீது ரசிகர்களுக்கு பரிதாபம் வராததும், ஆதி குணசேகரன் இல்லாததால் தற்போது அந்த வீட்டு பெண்கள் மீது ரசிகர்களுக்கு கோபமும் வருவதால் எந்த திசையில் செல்கிறது என்றே தெரியாத அளவிற்கு தற்போது எதிர்நீச்சல் தொடர் சென்று கொண்டிருக்கிறது. சிறந்த இயக்குனரான திருச்செல்வமே திக்கு முக்காடித்தான் போகியுள்ளார் என்றே கூற வேண்டும்.













