தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக உலா வந்தவர் கலாபவன் மணி. தமிழில் கமல்ஹாசன், விக்ரம், மாதவன், பிரபு, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சிறந்த நடிகர் மட்டுமின்றி மிமிக்ரி கலைஞரான இவர் கடந்த 2019ம் ஆண்டு திடீரென உயிரிழந்தார்.
உயிரை பறித்த பீர்:
அவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்போது கலாபவன் மணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு கேரள போலீஸ் வெளியிட்டுள்ளது.
கலாபவன் மணியின் மரணத்திற்கான காரணம் மது என்பதே உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் கலாபவன் மணி பீர் குடிப்பதை தண்ணீர் குடிப்பது போல வழக்கமாக வைத்திருந்ததே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
கலாபவன் மணி தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்து வந்துள்ளார் என்றும், அவரது கல்லீரல் இதன் காரணமாக செயலிழந்த நிலையிலும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளார் என்றும் அவரது வழக்கை விசாரித்த கேரள ஐ.பி.எஸ். அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும் அவர் தொடர்ந்து பீர் குடித்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலாபவன் மணி:
அளவுக்கு அதிகமாக சென்றால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி உள்ளபோது, ஆல்கஹால் மட்டும் எப்படி அதற்கு விதிவிலக்காகும்? என்பதையே இது உணர்த்துகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் பலரும் தாங்கள் வெறும் பீர் மட்டுமே குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறுவதை கேள்விபட்டிருப்போம்.
பீர் குடித்தால் உடல் எடை மட்டுமே போடும் என்ற கருத்துக்கள் பலரது மத்தியிலும் உலா வரும் நிலையில், அளவுக்கு அதிகமான பீர் உயிரையே காவு வாங்கும் என்பது கலாபவன் மணியின் மரணம் மூலம் நமக்கு உணர்த்துகிறது. மது எப்போதுமே நமக்கு மரணத்தையே பரிசாக தரும் என்பதற்கு நாம் ஒவ்வொருவரும் யாராவது ஒருவரின் மரணத்தையோ, ஒருவர் வாழ்க்கை சீரழிந்திருப்பதையோ கண்டிருப்போம்.
கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த நல்ல கலைஞர் கலாபவன் மணியின் உயிரையும் இந்த பீர் பறித்துள்ளது ரசிகர்களுக்கு உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீர் வகை மதுவோ, குவார்ட்டர், புல், பிராந்தி, விஸ்கி என எந்த வகை மதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது நிச்சயம் நம்மை மரணத்தின் பிடிக்கு கொண்டு செல்வதுடன் நம் குடும்பத்தையும் மிக கடுமையாக பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.













