இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துள்ளது. ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 669 ரன்கள் எடுக்க இந்தியா 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
ஆணவத்தில் இங்கிலாந்து:
இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வி அடையச் செய்துவிடலாம் என்ற மிதப்பில் இங்கிலாந்து அணி ஆடியது. ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை டக் அவுட்டில் இந்திய அணி பறிகொடுக்க காயத்தால் அவதிப்படும் ரிஷப்பண்டும் களமிறங்கமாட்டார் என்பதால் வெற்றி தங்களுக்கே என்று இங்கிலாந்து வீரர்கள் மிதப்புடனே ஆடினார்கள்.
கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், புஜாரா, விராட் கோலி, ரஹானே போன்ற ஜாம்பவான்களை தந்த இந்திய அணி அவ்வளவு எளிதில் தோல்வியை ஒப்புக்கொள்ளாது என்றும், பாேராட்ட குணம் என்ன என்பதை காட்டும் வகையிலும் கேப்டன் கில் – கே.எல்.ராகுல் ஆடினார்கள்.
ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர்:
4வது நாள் முழுக்க களத்தில் நின்ற அவர்கள் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருப்பினும், 5வது நாளான நேற்று இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவை சுருட்டி எளிதில் வெற்றி பெறலாம் என்றே கணித்தனர். அதற்கு ஏற்றாற்போல ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கே.எல்.ராகுல் 90 ரன்களில் அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த உடனே சதம் அடித்த கேப்டன் சுப்மன்கில்லும் அவுட்டானார். 224 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியாவை சுருட்டி வெற்றியைப் பெற்று தொடரை கைப்பற்றலாம் என்று கணக்கு போட்டார் பென் ஸ்டோக்ஸ். அப்போது 5வது விக்கெட்டிற்கு ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தனர்.
அசத்தல் சதம்:
இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் கலக்கி வரும் ஜடேஜா நேற்றைய போட்டியிலும் ஜொலித்தார். அவருக்கு மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் ஒத்துழைப்பு தந்தார். தொடக்கத்தில் நிதானமாக ஆடி களத்தில் நங்கூரமிட்டனர். இந்த ஜோடியை பிரிக்க கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், ப்ரைடன் கார்ஸ், டாவ்சன், ஜோ ரூட், ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக் என 7 பந்துவீச்சாளர்கள் வீசினர்.
பேஸ்பால் மைதானம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய இங்கிலாந்திற்கு அதுவே எதிரியாக மாறியது. மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்க ஜடேஜா – சுந்தர் ஜோடி பொறுமையாக ஆடியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.
இங்கிலாந்துக்கு ஆப்பு:
அரைசதம் கடந்தது மட்டுமின்றி இந்தியாவும் முன்னிலை பெற்றது. இந்தியாவை இனி வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிரா செய்ய கேட்டுக்கொண்டார். ஆனால், சதத்தின் அருகில் ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் இருந்ததால் இந்திய கேப்டன் கில் முடியாது என்று கூறிவிட்டார்.
இதனால், வெறுப்புடன் இங்கிலாந்து வீரர்கள் பந்துவீசினர். ஆனாலும், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து சதம் விளாசினர். வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்கவும் ஆட்டத்தை இந்தியா முடித்துக்கொண்டது. இதனால், ஆட்டம் டிரா ஆனது. 5வது நாள் ஆட்டம் தொடங்கும் வரை வெற்றி பெற்று விடலாம் என்று மிதப்புடன் இருந்த ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்கும், ரசிகர்களுக்கும் ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர் ஜோடி பாடமே எடுத்துவிட்டனர்.
மேலும், ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர்கள் கில், ஜடேஜா, சுந்தர் ஆகிய 3 பேரும் ஒரே இன்னிங்சில் சதம் விளாசி அசத்தியுள்ளனர்.














