இந்தியா – பாகிஸ்தான் மோதல் போர் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு அதை பாகிஸ்தான் மீறியதால் மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதனால், இரு நாட்டு மக்களும் பெரும் பதற்றத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை எங்கே?
இந்தியா பாகிஸ்தானுடன் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியா பாகிஸ்தானுடன் மொத்தம் 3 ஆயிரத்து 323 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
மேலே கூறிய இந்த இடங்களில் எத்தனை கி.மீட்டர் எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது என்பதை கீழே காணலாம்.
ஜம்மு – காஷ்மீர் – 1222 கி.மீட்டர்
ராஜஸ்தான் – 1170 கி.மீட்டர்
குஜராத் – 506 கி.மீட்டர்
பஞ்சாப் – 425 கி.மீட்டர்
இவ்வாறு மொத்தம் இந்தியா 3 ஆயிரத்து 323 கி.மீட்டரை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்:
இந்தியா – பாகிஸ்தான் எல்லை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காஷ்மீரே ஆகும். பனிப்பிரதேசமான காஷ்மீரில் அதிகளவு தீவிரவாதம் தழைத்துள்ளது. காஷ்மீரில் ராவல்கோட் – பூஞ்ச், சகோதி – உரி, சலியானா – தித்வால், டாடாபானி – மேந்தேர், ஹாஜி பீர் – சிலிகோட் ஆகிய இடங்களில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இவை எல்லை கட்டுப்பாடு கோடு என அழைக்கப்படுகிறது.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் இந்தியா – பாகிஸ்தான் பர்மீர் மாவட்டத்தில் எல்லையை பகிர்ந்து கொள்கின்றனர். அங்கு முனாபாவ் – கோக்ராபரில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், ஜெய்சல்மார், பலோடி, பிகானேர் மற்றும் ஸ்ரீகங்காநகர் ஆகிய இடங்களிலும் இந்தியா பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. காஷ்மீருக்கு அடுத்த படியாக ராஜஸ்தான் மாநிலமே மிகப்பெரிய அளவு எல்லையை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது.
குஜராத்:
குஜராத் மாநிலத்தில் உள்ள குட்ச் மற்றும் பனஸ்கந்தா ஆகிய இரண்டு மாவட்டங்களும் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதனால், அந்த மாவட்டங்களில் உள்ள பூஜ், நாளியா, நகத்ரானா மற்றும் காந்திதாம் நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பனஸ்கந்தாவில் 20 கிராமங்கள் உயர் அடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பஞ்சாப்:
பாகிஸ்தானுடன் குறைந்த அளவில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள மாநிலம் பஞ்சாப் ஆகும். பஞ்சாப் 425 கி.மீட்டரை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், குர்தஸ்பூர், ஃபாசில்கா, ஃபெரோஸ்பூர், பதன்கோட் மற்றும் தார்ன்தாரன் ஆகிய மாவட்டங்கள் எல்லையை பகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. புகழ்பெற்ற அட்டாரி – வாகா எல்லை பஞ்சாபிலே அமைந்துள்ளது.
தற்போது இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த எல்லையோர பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி பாதுகாப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.














