சத்குரு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று இருந்தார். அங்கு அவர் நேற்று அந்நாட்டின் அமைச்சர் ஷேக் நஹ்யானை, அபுதாபியில் உள்ள அவரது அலுவகத்தில் சந்தித்தார். சத்குருவிற்கு அமைச்சர் ஷேக் நஹ்யான் சிறப்பான வரவேற்பினை அளித்து அவருடன் கலந்துரையாடினார்.
சத்குருவிற்கு பாராட்டு:
இச்சந்திப்பின் போது ஷேக் நஹ்யான், உலகளவில் ஆன்மீக விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், உன்னதமான மனித மாண்புகளை வளர்ப்பதிலும் சத்குரு தலைமையேற்று செயல்படுவதாக பாராட்டினார். மேலும் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதிலும், கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலை வளர்ப்பதற்கும், நாடுகளிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதற்கும் சத்குருவின் முன்னெடுப்புகள் உலகிற்கான முன் மாதிரியாக செயல்படுகின்றன என்று குறிப்பிட்டார்.
விவேகமான வழி
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்குரு “ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பண்பை தன் இயல்பாகக் கொண்ட ஷேக் நஹ்யானை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி. அவர் தனது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் போற்றிக் காக்கும் அதே சமயம், அனைவரையும் அவர்களது கலாச்சாரம், நம்பிக்கை அல்லது அடையாளம் எதுவாக இருந்தாலும் வரவேற்கும் இயல்புடையவர்.
ஒரு நாட்டை ஆள்வதற்கான உண்மையிலேயே விவேகமான வழி இது. உலகளாவிய பொருளாதார மையமாக இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இப்போது உலகளவில் அனைவரையும் அரவணைக்கும் ஒரு மையமாகவும் உருவெடுத்து வருகிறது.” எனக் கூறியுள்ளார்.
மனதின் அதிசயம்:
முன்னதாக துபாயின் கலாச்சாரம் மற்றும் சுற்றலாத் துறையின் சார்பில் அபுதாபியில் நடைபெற்ற “கயான் வெல்னஸ் விழாவில்” சத்குரு சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்றார் அவ்விழாவில் அவர் “மனதின் அதிசயம் – உங்கள் விதியை உருவாக்குங்கள்” என்ற தலைப்பில் முக்கிய உரையை நிகழ்த்தினார். இந்த சிறப்புரையின் போது, மனித மனதின் பல்வேறு அம்சங்களையும் சாத்தியக்கூறுகளையும் அவர் விளக்கியதோடு, நம் உள்ளார்ந்த மேதைமையைத் திறப்பதற்கு “மனதின் அதிசயத்தை” எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது பற்றிய நுண்ணறிவுகளையும் பகிர்ந்துகொண்டார்.














