*தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 12ம் தேதி வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத இந்தியன் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.
இலவசங்களை விமர்சித்த இந்தியன் 2:
இந்தியன் 2 படத்தில் ஒரு காட்சியில் ஊழல் வாங்கும் அரசு அதிகாரி, மக்கள் இலவச பொருட்களை பெற்றுக் கொள்வதைப் பார்த்து ஏளனம் செய்வது போலவும், மக்களும் மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறியை பெற்றுக் கொண்டு செல்வது போல காட்டியிருப்பார்கள். இது ஒரு சாதாரண காட்சியாக காட்டப்பட்டிருந்தாலும், அரசின் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவே இது அமைந்துள்ளது.
ஆடம்பரமாக வாழ்பவர்களுக்கு, சொகுசு வாழ்க்கையாக வாழ்பவர்களுக்கு அரசு வழங்கும் மின்விசிறி, கிரைண்டர் மற்றும் மிக்ஸி ஒரு சாதாரண விஷயமாக தெரியலாம். ஆனால், தினக்கூலி வேலை செல்பவர்களுக்கு, மிக குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு, மாதந்தோறும் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களுக்கு, அரசு நியாய விலைக்கடைகளில் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு வாங்கும் குடும்பம் நடத்தும் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் மின்விசிறி, கிரைண்டர் மற்றும் மிக்ஸி மிக மிக அத்தியாவசியமான பொருள் ஆகும்.
மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி அத்தியாவசியமா? அனாவசியமா?
இந்த பொருட்களை அவர்களால் மொத்தமாக சென்று கடையில் ஒரே நேரத்தில் வாங்க முடியாத சூழல் இன்றும் பல குடும்பங்களில் நிலவிக்கொண்டு தான் இருக்கிறது. தற்போது பல குடும்பங்களில் பொருளாதார சூழல்கள் உயர்ந்து இருந்தாலும், கடந்த 10 -15 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருந்ததை காட்டிலும் சற்று பின்தங்கியே இருந்தது. அதுபோன்ற காலத்தில் அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டரும், மின்விசிறியும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பயனுள்ளதாகவே அமைந்தது.
இந்த திட்டங்கள் மட்டுமின்றி அரசு வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் அரசின் மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், தி.மு.க. அரசு 2006-2011ம் ஆண்டு வழங்கியபோது, தமிழ்நாட்டில் பல வீடுகளில் தொலைக்காட்சி என்பதே இல்லாமல் இருந்தது. அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று தொலைக்காட்சி பார்த்து வந்தவர்களுக்கு வண்ணத்தொலைக்காட்சி என்பது மிகப்பெரிய விஷயமே ஆகும்.
கல்வியை வளர்க்க உதவிய இலவசங்கள்:
அதேபோல, பெண் பிள்ளைகளை பள்ளிகளுக்கு பெற்றோர்கள் அனுப்பாமல் இருந்த சூழலில் பெண் பிள்ளைகளின் படிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கி அவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்தியது தமிழ்நாடு அரசு. அதன்பின்பு, அந்த இலவச மிதிவண்டி திட்டத்தை மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி பேருந்துகளே இல்லாத கிராமங்களில் இருந்து பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு மிகப்பெரிய வரமாக மாற்றியது தமிழ்நாடு அரசு.
இது அனைத்தையும் காட்டிலும் தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச மடிக்கணினி திட்டமானது பல மாணவர்களின் எதிர்காலத்தில் ஒளியேற்றியது என்றே சொல்ல வேண்டும். மடிக்கணினி என்பது இப்போது வரை பல மாணவர்களுக்கு கனவாகவே உள்ளது. மடிக்கணினி என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழலில் இருந்த மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கி அவர்களது வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது தமிழ்நாடு அரசு.
விலையில்லா திட்டங்கள்:
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக பேருந்து பயண அட்டை உள்பட பல விஷயங்களை செயல்படுத்தியுள்ளது. பொதுப்படையாக குற்றம் சாட்டுபவர்களுக்கு இது இலவசமாகவும், மக்கள் இலவசத்திற்காக அலைபவர்கள் போலவும் தெரியலாம். அல்லது இதை இவ்வாறு சித்தரிக்கவும் பலரும் இன்றளவும் முயற்சிக்கின்றனர்.
இதுபோன்று இலவசம் என்று மக்களை யாரும் கொச்சைப்படுத்தி விடக்கூாடது என்பதற்காகவே இலவசம் என்ற வார்த்தைக்கு பதிலாக விலையில்லா என்ற வார்த்தையை பயன்படுத்தினார் கருணாநிதி. திரைப்படத்தில் இடம்பெறும் சாதாரண காட்சியாக இருந்தாலும், நகைச்சுவையாக இருந்தாலும் அதன்தாக்கமானது எந்தளவு எதிரொலிக்கும் என்பதை அனுபவம் வாய்ந்த இயக்குனர் ஷங்கர் இன்னும் உணரவில்லை என்றே அந்த காட்சி நம்மை சிந்திக்க வைக்கிறது. தமிழகத்தை ஆண்ட தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆட்சியை கைப்பற்றவும், தக்கவைக்கவும் இதுபோன்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாலும், அந்த திட்டங்களால் லட்சக்கணக்கான மாணவர்களும், சாமானியர்களும் பயன்பெற்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை. இனியாவது அவரது படங்களில் சாமானிய மக்கள் நலன்பெறும் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை அவர் தவிர்த்துவிடுவது நல்லது ஆகும்.














