இந்தியாவில் ஐ.பி.எல். திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பலமிகுந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி ஐ.பி.எல். ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஷஷாங்க் சிங்:
சுப்மன் கில் அதிரடியால் முதலில் பேட் செய்த குஜராத் அணி 199 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் தனி ஆளாக போராடினார். அவருடன் இணைந்து இம்பேக்ட் வீரராக வந்த அசுதோஷ் சர்மாவும் அதிரடியாக ஆடினார். அசுதோஷ் சர்மா 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில், ஷஷாங்க் சிங்- பவுண்டரி, சிக்ஸராக விளாசினார். அவரது அபாரமான பேட்டிங்கால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக பஞ்சாப் அணி 1 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்தார்.
ஏலத்தில் நடந்தது என்ன?
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஷஷாங்க் சிங் 14 ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 32 வயதான இவர் தன்னுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடி வந்தார். நேற்றைய போட்டி இவருக்கான வாய்ப்பாக அமைந்தது. கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் வேறொரு ஷஷாங்க் சிங் என்று நினைத்து இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்க முன் வந்தது. பின்னர், ஏலத்தை தொகுத்து வழங்குபவர் கேட்டபோது பஞ்சாப் நிர்வாகம் தடுமாறியது.
பின்னர், இவரை ஏலத்தில் எடுத்தது. மேலும், அடுத்த நாள் தாங்கள் சரியான ஷஷாங்க்கையே ஏலத்தில் எடுத்தோம் என்று பதிலளித்தனர். ஆனால், அவர்கள் வேறு ஒரு வீரருக்கு பதிலாக இவரை தவறுதலாக ஏலத்தில் எடுத்தது ஏலத்தின்போது நெஸ்வாடியா மற்றும் ப்ரீத்தி ஜிந்தா உடல்மொழியிலே தெரிந்தது. இந்த சூழலில், தவறுதலாக ஏலத்தில் எடுத்த ஷஷாங்க் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை தரும் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.














