தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக திகழ்ந்தவர் டேனியல் பாலாஜி. அவர் 48 வயதே ஆன அவர் நெஞ்சுவலியால் திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் சோகம்:
தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், குரலாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் இவரது வில்லத்தனம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
பொல்லாதவன் படத்திலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கௌதம் மேனன், வெற்றிமாறன் படங்களிில் தவிர்க்க முடியாத நடிகராக உலா வந்தவர். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செத்தும் கொடுத்த டேனியல் பாலாஜி:
திரையில் வில்லன் நடிகராக உலா வந்தாலும், நிஜத்தில் நல்ல குணம் கொண்டவராக வந்தவர். பல இக்கட்டான நேரத்தில் பலருக்கும் உதவி செய்துள்ளார். தனது மறைவுக்கு பின்னரும் அடுத்தவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வாழ்ந்தவர். இதன் காரணமாக, தனது மரணத்திற்கு பிறகு தனது கண்ணை தானமாக வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, அவரது மரணத்திற்கு பிறகு அவரது உடலில் இருந்து கண் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தகுதி வாய்ந்த நபருக்கு அந்த கண் தானமாக வழங்கப்பட உள்ளது. இறந்தும் அடுத்தவருக்கு வாழ்வு தந்த டேனியல் பாலாஜியின் குணத்தை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.














