உலகின் சவாலான டெஸ்ட் அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி நேற்று அவர்களது சொந்த மைதானமான செஞ்சுரியனில் முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க முதலில் பந்துவீச்சைத் தொடங்கியது.
சரிந்த இந்தியா:
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. உலகக்கோப்பைக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பிய கேப்டன் ரோகித்சர்மா 14 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், சுப்மன்கில் 2 ரன்னிலும் அவுட்டானார்கள். 24 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்காக விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக அணியை மீட்ட ஸ்ரேயஸ் 31 ரன்களில் அவுட்டாக, அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 64 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அணி மீண்டும் சரிவை நோக்கிச் சென்றபோது களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார்.
மறுமுனையில் அஸ்வின் வந்த வேகத்தில் அவுட்டாக, ஷர்துல் தாக்கூரை மறுமுனையில் வைத்துக்கொண்டு அணியின் ஸ்கோரை ஏற்றினார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த ஷர்துல் தாக்கூர் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். இதனால், 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 200 ரன்களை கடந்தது.
தாங்கிப்பிடித்த கே.எல்.ராகுல்:
சிறப்பாக ஆடிய ஷர்துல் தாக்கூர் 24 ரன்களுக்கு அவுட்டாக, கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 105 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களுடன் ஆடியபோது மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஏமாற்றம் தர, மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுலால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இதே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க மண்ணில் கேப்டனாக கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.













