வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பு இந்தாண்டு சென்னை சந்தித்த பெரும் பாதிப்பு என்றே சொல்லலாம். ஏனென்றால், சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
ஒட்டுமொத்த சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கியும், அண்ணாசாலையிலே மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியதும் பார்ப்பவர்களை மிகவும் வேதனை அடைய வைத்தது.
வடியாத தண்ணீர்:
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் மறுநாள் அகற்றப்பட்டாலும் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், வட சென்னையின் மூலக்கொத்தளம், மிண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது.
தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது என்று ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டாலும், தண்ணீர் அகற்றப்படவில்லை என்று பொதுமக்களின் வேதனைகளை அதே சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த சூழலில், அதை சரி செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் சிலரும், அமைச்சர்கள் சிலரும் மிகவும் அலட்சியமாக பேசுவது மிகவும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
அலட்சிய பேச்சு:
வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவ்வளவுதான் செய்ய முடியும் என்று பேசியது, அமைச்சர் கே.என். நேரு பெண் ஒருவரிடம் அவ்வளவு நேரமெல்லாம் பேச முடியாது மா என்று அலட்சியமாக பேசி நகர்ந்தது போன்ற வீடியோக்கள் இவர்களுக்கு எதற்கு வாக்களித்தோம் என்று எண்ண வைத்துள்ளது.
இந்த சூழலில், வெறும் ஒரு சீட்டு, இரண்டு சீட்டிற்காக சில கூட்டணி கட்சியினர் பேசும் பேச்சு மக்களை இன்னும் ஆத்திரத்தில் தூண்டியுள்ளது. அந்த வரிசையில் முதலில் இருப்பவர் கமல்ஹாசன் ஆவார். உலக நாயகன் என்று மக்களால் சினிமாவில் போற்றப்பட்டாலும், ஒரு அரசியல் தலைவனாக அவர் மிக்ஜாம் புயலுக்கு பதிவிட்ட பதிவும், அவரது பேட்டியும் இவரும் இப்படித்தான் என்று எண்ணவைத்துள்ளது.
ஆளுங்கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு
மிக்ஜாம் புயலால் சென்னை தத்தளித்ததை பார்க்காதவர்கள் யாருமில்லை என்ற சூழலில், பல இடங்களில் 3 நாட்களாக மின்சாரம் வழங்கப்படாத சூழலில், சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழை பெய்து 4 நாட்களுக்கு பிறகே தண்ணீர் அகற்றப்பட்டது என்று மாநகராட்சியே ஒத்துக்கொண்ட சூழலிலும் கமல்ஹாசன் விடாமல் தி.மு.க. அரசுக்கு ஆதரவை அளித்து வருகிறார்.
பெருவெள்ளத்தன்று அரசு எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கை சீற்றங்களை ஓரளவுதான் கட்டுப்படுத்த மடியும் என்று பதிவிட்டிருந்தார். நேற்று அளித்த பேட்டியில் அரசை விமர்சிப்பதை அப்புறம் செய்யலாம் என்று பேட்டி அளித்துள்ளார்.
கூட்டணிக்கு ஆர்வம்
இதே கமல்ஹாசன், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களை சரமாரியாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துக் கொண்டே வந்தார். அவரது சரமாரியான தாக்குதல்களுக்கு பிறகு கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கி, தனித்து போட்டியிட்டார். ஆனால், மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வெளியீட்டில் வெளி வந்த விக்ரம் படத்திற்கு பிறகு, கமல்ஹாசன் தி.மு.க. அரசை விமர்சிப்பதை முற்றிலும் தவிர்த்து வருகிறார். அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியுடன் கைகோர்க்க கமல்ஹாசன் ஆர்வம் காட்டி வருவது கடந்த சில காலங்களாக அவரது செயல்பாட்டின் மூலம் தெரியவருகிறது.
இப்படியா?
தற்போதைய மிக்ஜாம் புயல் சூழலில், தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு ஆதரவான கமல்ஹாசனின் பேட்டிகளும், பதிவுகளும் அடுத்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அவர் இடம்பெறுவதை மேலும் உறுதி செய்கிறது. ஒரு அரசியல்வாதியாக ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பது பொதுவானது என்றாலும், இந்த பேரிடரில் கூட்டணியிலே இல்லாத சூழலில் கமல்ஹாசன் ஆளுங்கட்சிக்காக இப்படி ஆதரவுக்குரல் கொடுப்பது அவரது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. ஒரு சீட்டுக்காக உலகநாயகன் இப்படி பேசுகிறாரே? என்று பார்ப்பவர்களை வேதனை அடையச் செய்கிறது.














