மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில், மின்கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த கால அவகாசம் நீட்டித்து மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ கடந்த 3.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 4.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
மிக்ஜாம் புயல்:
இந்த நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கால அவகாசம்:
இதுதொடர்பாக, அவர் தெரிவித்துள்ளதாவது,
1. மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 4.12.2023 முதல் 7.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழல் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
2. மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 4.12.2023 முதல் 6.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிகட்டப்படும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














