நாடு முழுவதும் நேற்று முதல் பேசுபொருளாக இருப்பது உலகக்கோப்பைதான். சுமார் ஒன்றரை மாதமாக நடைபெற்ற உலகக்கோப்பைத் திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. வெற்றியுடன் தொடங்கி இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் வெற்றிப்பயணம் நேற்று முடிவுக்கு வந்தது.
தோல்வி சோகம்:
இந்திய அணி உலகக்கோப்பையை 2வது முறையாக இறுதிப்போட்டியில் தவறவிட்டுள்ளது. இது சுமார் 100 கோடி இந்திய அணியின் ரசிகர்களை கலங்க வைத்தது. பல இடங்களில் ரசிகர்கள் கதறி அழுத சம்பவமும் நடந்தது. இந்தியாவில் கிரிக்கெட் என்பது தங்கள் வீட்டில் உள்ள ஒரு உறவைப் போலவே உணரப்பட்டு வருகிறது. இதுவே இந்திய ரசிகர்களின் பெரும் சோகத்திற்கு காரணம். ஆனாலும், விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சமமே ஆகும். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியதால் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கலாம். ஆனால், அந்த போட்டியில் தோற்றாலும் இந்திய அணி சாம்பியன்தான் என்றே சொல்ல வேண்டும். இந்த தொடர் முழுக்க இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
தொடர் வளர்ச்சி:
குறிப்பாக, ரோகித்சர்மா, விராட்கோலி, முகமது ஷமி, பும்ரா, சிராஜ், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் என இந்திய அணி வீரர்கள் சிறப்பாகவே ஆடினார். கிரிக்கெட் மட்டுமின்றி அன்றைய தினத்தில் மைதானத்தில் யார் நன்றாக ஆடுகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி. அதுபோலவே, நேற்றைய போட்டியில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடியது அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
இந்திய அணி தோற்று விட்டது என்று கவலைப்படுவதை விட, 2011 உலகக்கோப்பைக்கு பிறகு தொடர்ந்து அரையிறுதிக்கு 3 முறை முன்னேறியுள்ளது. இதில், இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்றிலே வெளியேறிய பிறகு, அதன்பின்பு நடந்த 4 உலகக்கோப்பையிலும் இந்தியா அரையிறுதியில் கால்தடம் பதித்துள்ளது.
ரோகித், விராட்:
இன்று சாம்பியனாக மகுடம் சூட்டிக்கொண்ட ஆஸ்திரேலியா தற்போது இருப்பதை காட்டிலும் பன்மடங்கு பலமாக ரிக்கி பாண்டிங் தலைமையில் இருந்தபோது, ஹாட்ரிக் உலகக்கோப்பை கனவுடன் வந்தவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்ததும் இந்திய அணிதான் என்பதை மறக்கக்கூடாது. ஆஸ்திரேலிய அணியில் இருந்த வார்னர், ட்ராவிஸ் ஹெட், மார்ஷ், ஸ்மித், லபுஷேனே ஆகியோரை விடும் இந்தியாவின் ரோகித்சர்மா, விராட்கோலி தலைசிறந்த வீரர்கள் என்பதை மறுக்கவும் முடியாது.
இந்த கோப்பையை ரோகித்சர்மாவும், விராட்கோலியும் கையில் ஏந்துவதை பார்க்க முடியவில்லை என்பதை நினைக்கும்போது இதயம் நொறுங்குகிறது என்பது உண்மையென்றாலும், வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட மாபெரும் வீரர்கள் மட்டுமின்றி மாபெரும் சகாப்தங்கள் ரோகித்சர்மாவும், விராட் கோலியும் என்பது உண்மை.
ரியல் சாம்பியன்கள்
அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக ஆவரேஜ், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், அதிக அரைசதம், அதிக விக்கெட்டுகள், அதிக 5 முறை விக்கெட்டுகள், சிறந்த பவுலிங் ஸ்ட்ரைக் ரேட், சிறந்த பவுலில் ஆவரேஜ், சிறந்த பவுலிங் என அனைத்துமே நம் இந்திய அணியின் வசமே இந்த தொடர் முழுவதும் இருந்துள்ளது.
இதனால், இந்த தொடர் முழுவதும் நமது இந்திய ரசிகர்களை மகிழ்வித்த இந்திய அணிக்கும் வழிநடத்திய ரோகித்சர்மாவிற்கும், தாங்கிப்பிடித்த விராட் கோலிக்கும் வாழ்த்துகளையே தெரிவிப்போம். உலகக்கோப்பையையும், பரிசுத் தொகையும் ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கலாம். ஆனால், 100 கோடி மக்களின் மனங்களை வென்றது இந்திய அணியே ரியல் சாம்பியன் ஆவார்கள்.














