தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
லட்சுமி குபேர பூஜை:
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் செல்வம் தழைத்தோங்க லட்சுமி குபேர பூஜை நடத்தப்படுவது வழக்கமாகும். அதாவது, செல்வங்களின் அதிபதிகளான லட்சுமி தேவி மற்றும் குபேரனை தீபாவளி தினத்தில் போற்றி வணங்கினால் வீட்டில் செல்வம் பெருக்கெடுக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலம் ஆகும். விரதமிருந்து குபேர பூஜை செய்தால் வீட்டில் கடன்கள் தீர்ந்து, செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம்
லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?
லட்சுமி குபேர பூஜையை நாம் வீட்டிலே செய்ய வேண்டும் என்றால், வீட்டில் உள்ள பூஜையறையில் குபேர படத்தை வைக்க வேண்டும். பின்னர், இரு பக்கமும் குத்து விளக்கேற்ற வேண்டும். குபேர படத்தின் முன்பு பெரிய வாழை இலையை வைக்க வேண்டும். அதில் நவ தானியங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.
பின்னர், அந்த இலையின் நடுவே சுத்தமான தண்ணீர் நிரப்பிய சொம்பை வைக்க வேண்டும். அந்த சொம்பின் மேலே மாவிலைகளை கட்ட வேண்டும். பின்னர், சொம்பின் வாய் பகுதியில் தேங்காய் வைத்து கலசம் போல குங்குமம், மஞ்சளால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், மஞ்ளிலே பிள்ளையாரை பிடித்து விநாயகப் பெருமானை வணங்கி பூஜையை தொடங்க வேண்டும்.
விநாயகர் துதியை பாடி பூஜையை தொடங்கிய பிறகு குபேர மந்திரங்கள் அல்லது குபேராய நமஹ தனபதியே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை கூறி தாமரை இதழ்களால் பூஜிக்க வேண்டும். லட்சுமி தேவி மற்றும் குபேரனுக்கு தாமரை இதழ்கள் மிகவும் உகந்தது ஆகும்.
பின்னர், பூஜைக்காக படைக்கப்பட்ட இனிப்பு, பாயாசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படையலிட்டு பூஜையை முடிக்க வேண்டும். இந்த பூஜையின்போது காணிக்கையாக நாணயங்கள் ( தங்க நாணயங்கள் இருந்தாலும் சிறப்பு) வைத்து பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்த நாணயங்களை உங்கள் வீட்டின் பெட்டகத்தில் வைக்க வேண்டும்.
பலன்கள்:
தீபாவளி தினத்தில் செய்யும் இந்த லட்சுமி குபேர பூஜையால் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு தழைத்தோங்கும் என்பது ஐதீகம் ஆகும்.














