உலகக் கோப்பைத் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் தொடங்கியது முதல் பல திருப்பங்களும், அதிரடி முடிவுகளும் கிடைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் வெற்றி வேட்டை:
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி பேட்டிங் செய்தது. சுப்மன்கில் 9 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி டக் அவுட்டாகியும், ஸ்ரேயாஸ் 4 ரன்னிலும் அவுட்டாக கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அபாரமாக ஆடிய ரோகித்சர்மா 87 ரன்கள் எடுத்தார். ராகுல், 39 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுக்க கடைசியில் இந்தியா இங்கிலாந்துக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
50 ஓவர்களில் 230 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கே ஆகும். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை காட்டிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் திறம்பட செயல்பட்டனர் என்றே சொல்ல வேண்டும். பும்ராவும், ஷமியும் இங்கிலாந்தை சிதைத்தனர் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இங்கிலாந்தின் அசுர பேட்ஸ்மேன்களான பார்ஸ்டோ, டேவிட் மலன், ஸ்டோக்ஸ், கேப்டன் பட்லர், ஜோ ரூட் ஆகியோரை 52 ரன்களுக்குள் காலி செய்துவிட்டனர்.
காக்கும் சாமியாக ஷமி:
ஷமி பந்துவீச்சில் மிரட்டிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். மிகவும் திறமையான மற்றும் அனுபவமிக்க முகமது ஷமியை, ஷர்துல் தாக்கூருக்காக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைத்தது இந்திய நிர்வாகம். அவருக்கு சவால் மிகுந்த நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா இல்லாத காரணத்தால் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தன்னை உட்கார வைத்தது மிகவும் தவறு என்பதை உணர்த்தும் வகையில் அந்த போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ஒருநாள் உலகக் கோப்பையில் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார்.
ஓரங்கட்டியது எவ்வளவு பெரிய தவறு:
அதைத்தொடர்ந்து, இந்த தொடரில் அவர் களமிறங்கிய 2வது போட்டியான நேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பையில் ஆடிய அனுபவமிக்க முகமது ஷமியை இந்திய அணி நிர்வாகம் ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டர் என்று கூறி, அவருக்காக ஓரங்கட்டியது. ஆனால், தான் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு செல்ல முடியாது என்பதை ஷமி நிரூபித்துள்ளார்.
குறிப்பாக, நேற்றைய போட்டியில் அவர் பந்தில் பார்ஸ்டோ, பென்ஸ்டோக்ஸ், ரஷித் ஸ்டம்புகள் பறந்தது. குறிப்பாக, அபாயகரமான வீரர் பென் ஸ்டோக்ஸ் ஸ்டம்ப் சிதறியது ஷமியின் பந்துவீச்சு திறமைக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். ஹர்திக் பாண்ட்யா குணமாகி அணிக்கு திரும்பினாலும், முகமது ஷமியை பெஞ்சில் உட்கார வைக்காமல் இந்த தொடர் முழுவதும் ஆட வைத்தால் இந்திய அணிக்கு வெற்றி மேல் வெற்றி நிச்சயம் ஆகும்.














