உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு மிகுந்த திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதுவரை இந்திய அணி தாங்கள் எதிர்கொண்ட ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
மிரட்டும் கிங் கோலி:
இமாச்சல பிரதேசத்தில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி உலகக்கோப்பையில் 20 ஆண்டுகளாக தங்களால் வீழ்த்த முடியாத நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் இந்திய அணிக்காக அபாரமாக ஆடிய விராட்கோலி 95 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். ரோகித்சர்மா, சுப்மன்கில் சிறப்பான தொடக்கம் அளித்தாலும் அவர்கள் ஆட்டமிழந்த பிறகும், ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் அவுட்டான பிறகும் நியூசிலாந்துக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது.
ஆனால், விராட்கோலி தான் களத்தில் இருக்கும் வரை வெற்றி எதிரணிக்கு அவ்வளவு எளிதில் வசப்படாது என்பதை நிரூபித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த தொடர் தொடங்கியது முதல் இந்திய அணியின் பெரும் பலமாக பார்க்கப்பட்டவர்கள் ரோகித் சர்மா – விராட்கோலி மட்டுமே எனலாம். ஏனென்றால், இவர்கள் இருவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்தவர்கள்.
முறிடிக்கப்படுமா சச்சின் சாதனை:
குறிப்பாக, இந்த தொடர் தொடங்கியது முதல் விராட்கோலியின் பேட்டிங் இந்திய அணிக்கு முதுகெலும்பாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிக நெருக்கடியான சூழலில் 85 ரன்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 55 ரன்கள் ஆட்டமிழக்காமல், வங்கதேசத்திற்கு எதிராக 103 ரன்கள் ஆட்டமிழக்காமல், நேற்று நியூசிலாந்துக்கு எதிராக கடும் பனிமூட்டத்திற்கு மத்தியில் 95 ரன்கள் என இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்துள்ளார்.
நேற்றைய போட்டியில் மட்டும் சதம் விளாசியிருந்தால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருப்பார். ஆனாலும், இந்த தொடரில் சச்சின் சாதனையை சமன் செய்வது மட்டுமின்றி அவரது சாதனையை முறியடித்து ஒருநாள் போட்டியில் தன்னுடைய 50வது சதத்தை விராட் கோலி அடிப்பார் என்றே ரசிகர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
எத்தனை விமர்சனங்கள்:
ஏனென்றால், அவர் இரண்டரை வருடங்களாக சதம் அடிக்காமல் இருந்தபோது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை மற்றொரு வீரர் எதிர்கொண்டு இருந்தால் நிச்சயம் அவர் கிரிக்கெட்டை விட்டே காணாமல் போயிருப்பார். பி.சி.சி.ஐ. கொடுத்த தலைவலி, கேப்டன் பதவி பறிப்பு, கங்குலியுடன் ஏற்பட்ட மோதல், முன்னாள் வீரர்களின் தொடர் விமர்சனம் என்று ஒரு ஜாம்பவானுக்கு என்னென்ன துயர் எல்லாம் தரக்கூடாதோ அத்தனை துயர்களையும் தந்தனர்.
ஆனால், அத்தனையையும் பொறுமையுடன் கடந்து ஒரு மாதம் கிரிக்கெட் பேட்டையே தொடாமல் இருந்து கடந்தாண்டு ஆசியக் கோப்பை தொடரில் சிங்கம் போல கம்பேக் கொடுத்தார் விராட் கோலி. அப்போது தொடங்கிய தனது கம்பேக் ரன் வேட்டையில் டி20யில் சதம், ஒருநாள் போட்டியில் சதம், டெஸ்ட் போட்டியில் சதம் என அத்தனை விமர்சனங்கள் மீது சம்மட்டி அடி அடித்தார்.
உலகக் கோப்பை மகுடமாகுமா?
இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் விராட் கோலி அடித்த சதம் அவரது வருகையை கிரிக்கெட் உலகிற்கு மீண்டும் பறை சாற்றியது. ஒரு காலத்தில் சச்சின், தோனி களத்தில் இருக்கும் வரை இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருப்பது போல இப்போது கோலி இருக்கும் வரை இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் உயிர்ப்புடன் உள்ளது.
கோலியின் சதத்திற்காக கே.எல்.ராகுலும், ஜடேஜாவும் ரன் எடுக்காமல் நிற்பது மூலமே நாம் விராட் கோலியின் சதத்தை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணியும் எந்தளவு விரும்புகிறது என்பதை காணலாம். மகுடம் இல்லாத ராஜாவாக வலம் வரும் விராட் கோலிக்கு நிச்சயம் ரோகித் படை இந்த உலகக் கோப்பையை மகுடமாக சூட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய மற்றும் விராட் கோலி ரசிகர்களின் கனவாகும்.














