உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் ஆடி 3லும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளை ஏற்கனவே வீழ்த்தியதால் இந்திய அணி உற்சாகத்துடன் ஆடி வருகிறது.
இந்தியா – வங்கதேசம்:
இந்த நிலையில், இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோத உள்ளது. புனேவில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
இந்த தொடரில் நடைபெற்ற கடந்த சில ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு ஆப்கானிஸ்தான் அணியும், பலமிகுந்த தென்னாப்பிரிக்க அணிக்கு நெதர்லாந்து அணியும் அதிர்ச்சி வைத்தியம் அளித்ததால் இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயம் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். இந்திய அணி வங்கதேசத்திற்கு சிறியளவு வாய்ப்பு அளித்தாலும் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்றே கூறலாம்.
வங்கதேச அணியை பொறுத்தவரையில் அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவர்களுக்கு பெரும் பலம் ஆகும். அவருடன் அனுபவம் நிறைந்த ரஹீம், லிட்டன் தாஸ் இருப்பது அவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும். பந்துவீச்சில் முஸ்தபிஷூர் ரஹ்மான், மெகிதி ஹாசன், நசும் அகமது அவர்களுக்கு பலமாக உள்ளனர். ஆல்ரவுண்டராக கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஜொலிப்பார் என்பதால் அவரது சிறப்பான ஆட்டம் அந்த அணிக்கு தேவையாகும்.
ரசிகர்கள் ஆர்வம்
இந்திய அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ரோகித்சர்மா நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாகும். கேப்டன் ரோகித்திற்கு சுப்மன்கில் சிறப்பான ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். விராட்கோலி சிறப்பாக ஆடுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், பாண்ட்யா, ஜடேஜா கூடுதல் பலமாக உள்ளனர்.
வங்கதேசத்திற்கு ரஹீம், லிட்டன்தாஸ், ஷகிப், ஷான்டோ, தௌகித், மெகிதி ஹாசன் பேட்டிங் பலமாக உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், பாண்ட்யா, ஜடேஜா பலமாக உள்ளனர். அஸ்வின், ஷர்துல், ஷமி இவர்களில் யாராவது ஒருவர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.














