மலச்சிக்கல் மனுஷனுக்கு பல சிக்கல் என்று நாம் ஒரு வசனத்தை கேட்டிருப்போம். அது நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் உண்மை. நமது உடலில் மிகவும் அழகான விஷயம் என்பதே நமது உடலை நாம் ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நம் வயிறு கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும்.
அதற்கு உங்கள் கழிவுகள் முறையாக வெளியேற வேண்டும். மலச்சிக்கல் தானே என்ன ஆகிவிடப் போகிறது என்று நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நாள்பட்ட மலச்சிக்கல் மூலம் நோயை உண்டாக்கிவிடும். பின்னர், கடும் அவதியை சந்திக்க நேரிடும்.
மலச்சிக்கல் வருவதற்கு மிக முக்கிய காரணம் நாம் மட்டுமே. நமது முறையற்ற உணவுப்பழக்கமும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுமே இதற்கு காரணம் ஆகும். மலச்சிக்கலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இரவு உணவில் கவனம்:
நாம் இரவு நேரங்களில் பரோட்டா போன்ற மாவு உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது மிக மிக நல்லது. மாவு போன்ற உணவுப் பொருட்கள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகுவதுடன் மலத்தை இறுகச் செய்யும் தன்மை கொண்டது. இதனால், இரவு நேரத்தில் எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். அதுதான், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நீர்ச்சத்துள்ள பழங்கள்:
நீர்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிக மிக நல்லது ஆகும். ஏனென்றால், வெள்ளரி, ஆப்பிள், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்களும், காரட், முள்ளங்கி, பீட்ரூட் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளும் நாம் அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன் உடலும் குளுமை அடையும். இதனால், நமது மலம் இறுகுவதும் தவிர்க்கப்படும்.
இரவுகளில் அசைவ உணவுகள்:
தற்போதுள்ள நடைமுறையில் சாப்பிடும் நேரமே பலருக்கும் அவர்களது திட்டத்திலே இல்லாததுபோல உள்ளது. இரவு நேரங்களில் செரிமானம் அடைய மிகவும் சிரமத்தை தரும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது ஆகும். ஏனென்றால், இரவில் சாப்பிடும் இதுபோன்ற உணவுகளால் காலையில் மலம் கழிக்கும்போது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.
தூக்கமின்மை:
இன்று பலருக்கும் இரவு தூங்கும் நேரம் என்பது 12-ஐ கடந்தே உள்ளது. இதனால், காலையில் எழுவதும் முறையற்றே உள்ளது. நாம் என்ன வேலை செய்தாலும் நம் உடலுக்கு 8 மணி நேர தூக்கத்தை அளிக்காவிட்டால் நிச்சயம் நமது உடல் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அந்த 8 மணி நேர உழைப்பு தவறும் பட்சத்தில் அதுவும் மலச்சிக்கலுக்கு காரணமாக அமையும்.
வயிறு சுத்தமாக இருந்தாலே நம் வாழ்க்கை சுத்தமாக மாறிவிடும் என்று சொல்வதற்கு அர்த்தம் என்னவென்றால், வயிறை சுத்தமாக வைத்துக்கொண்டால் நம் உடலுக்கு எந்த பிரச்சினையும் வராது. உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனமும் ஆரோக்கிம் ஆகும் என்பதே ஆகும்.














