நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். ஆனாலும், பா.ஜ.க. தங்களது ஆட்சியை மீண்டும் தக்க வைக்க புதிய, புதிய வியூகங்களை வகுத்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திராவிட கட்சிகளின் கையே ஓங்கி உள்ளது. இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அ.தி.மு.க.விற்கு தமிழக பா.ஜ.க.விற்கும் இடையே மோதல்போக்கு நிலவி வந்தது.
முறிந்த கூட்டணி:
குறிப்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு அ.தி.மு.க.வினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவெளியில் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்தது அ.தி.மு.க.வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் டெல்லி பா.ஜ.க. வரை முயற்சித்தனர். ஆனாலும், எந்த பலனும் இல்லாததால் நேற்று அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த முடிவால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்களும், வரவேற்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் ஆதரவால்தான் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் இருந்துவந்தது.
எடப்பாடிக்கு வரவேற்பும், முன் உள்ள சவாலும்:
மேலும், அண்ணா, ஜெயலலிதாவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்தபோதும் அவர்களுடனான கூட்டணியை முறிக்காமல் இருந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது, மிகவும் துணிச்சலாக கூட்டணியை முறித்துக் கொண்டது எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, இபிஎஸ்-சின் இந்த முடிவிற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அவர்கள் அ.தி.மு.க.விற்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் தர வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முத்தரப்பு கூட்டணி அமைத்துள்ள ஓ.பி.எஸ். – தினகரன் – சசிகலா ஆகியோர் பா.ஜ.க.வை விட்டு தனித்து நிற்கும் அ.தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கவும் முயற்சிப்பார்கள். இந்த சிரமங்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டிய சூழலில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படும் தென் தமிழகத்தில் தற்போது ஓ.பி.எஸ், சசிகலா இல்லாததால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எடுத்துள்ள இந்த முடிவிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர்.













